வெள்ளி, 13 மார்ச், 2015

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பு
 
அன்பழகனின் மனு மீது, கர்நாடக அரசு, ஜெயலலிதா 18–ம் தேதிக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Honorable_CM_Jayalalitha_Photos_Stills_Images_19
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நீதிபதி குமாரசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், அன்பழகனின் மனு மீது, கர்நாடக அரசும், ஜெயலலிதா தரப்பும் வரும் 18–ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 1991–96–ல் தமிழக முதல் அமைச்சராக இருந்த போது, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்து, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார். மற்ற 3 பேர்களுக்கும் தலா 4 ஆண்டு சிறையும், தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் அப்பீல் செய்ததுடன், ஜாமீன் மனுக்களையும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கின் அப்பீல் விசாரணையை, பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி நடத்தவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் படி, பெங்களூரில் நீதிபதி குமாரசாமி தனது விசாரணையை தொடங்கினார். 36—வது நாள் விசாரணையின் போது, அரசு தரப்பு சாட்சிகள் ராஜாராமன், ராதா கிருஷ்ணன், சிவா ஆகியோர் கொடுத்துள்ள சாட்சிகளை, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், வாசித்து காட்டினார். “இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இயக்குனர்களாக மற்றும் பங்குதாரர்களாக இருக்கும் “மெடோ ஆக்ரோபாரம்” மற்றும்”ரிவர்வே ஆக்ரோ பாரம்” ஆகிய நிறுவனங்களுக்கு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலமும், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, மீரா குளம் மற்றும் சேரகுளம் கிராமங்களில் 1,300 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது” என்று பவானி சிங் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,”நிலம் வாங்க ஜெலலிதாவின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது? நிலம் வாங்க ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டதா?காசோலையாக கொடுக்கப்பட்டதா?அதற்கான ஆதாரங்களை கொடுங்கள்” என்று கேட்டார்.
crkj
இந்த கேள்விக்கு தாமதமாக, “இதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்கிறேன்” என்றார். உடனே நீதிபதி, “நான் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கூறாமல், தாமதமாக பதில் கூறுகிறீர்களே., எந்த குற்றத்துக்கும் சட்டபடியான ஆதாரமும், சாட்சிமும் இருந்தால் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும்., இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.” என்று நீதிபதி கூறினார். “1971—ம் ஆண்டு தன்னிடம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு கொடுத்துள்ளார். வழக்கு காலத்தில் அவரது சொத்து என்ன? அதன் பின் அவரது சொத்து என்ன? என்ற விவரத்தை நான் பல முறை கேட்டும், இரு தரப்பினரும் தாக்கல் செய்ய வில்லையே, ஏன்?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
“நான் கேட்கும் ஆவணங்களை நீங்கள் கொடுக்க வில்லை., தனி நீதிமன்றத்திலும் இப்படித்தான் வாதிட்டீர்களா? கம்பெனிகளை, இந்த வழக்கில் சேர்த்தற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள்” என்று, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கூறினார்.
இதன் பின் 37—வது நாள் விசாரணையின் போது. “ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ 9 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக கூறும் நீங்கள், அதற்கான ஆதாரத்தை கொடுங்கள். கூட்டு சதி எப்போது நடந்தது?இதற்கு அடிப்படை முகாந்திரம் உண்டா ?” என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், நீதிபதி குமாரசாமி கேட்டார். இதற்கு பதில் அளித்த பவானி சிங், “ நேரடியாக சாட்சியங்கள் இல்லை என்றாலும், ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த ஜெயராமன் கொடுத்துள்ள சாட்சியத்தில், ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் அடிக்கடி லட்சக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். வங்கி அதிகாரிகள் அளித்த சாட்சியத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. “ என்றார்.
“ ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள “கூட்டு சதி” என்ற பிரிவை எப்படி உறுதிப்படுத்த போகிறீர்கள்? இவர்கள் அனைவரும் எந்த இடத்தில் அமர்ந்து இதில் ஈடுபட்டனர்., இந்த வழக்கை பதிவு செய்த பின் ஆதாரத்தை தேடினீர்களா? அல்லது விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை கொடுத்தும் நீங்கள், இந்த நீதிமன்றத்தில் கூறாமல் மறைக்கிறீர்களா? பொதுவாக இப்போது சில நாட்களாக உங்கள் செயல்பாட்டில் நீங்கள் மதில் மேல் பூனையாக செயல்படுகிறீர்கள். நீங்கள் சரியாக வாதம் செய்ய வில்லையா?” என்று நீதிபதி குமாரசாமி கேட்டார் .
BHAVANI_SINGH_INTE_1601819e
இதற்கு பதில் அளித்த பவானி சிங்,”இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வில்லை.,குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, நேரடியான சாட்சிகள் இல்லை., அவர்கள் கொடுத்த ஆதாரங்களை வைத்துதான் வாதாடுகிறேன்.” என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி குமாரசாமி,” நீங்கள் தானே தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதிட்டீர்கள்? அப்போது எந்த ஆதாரத்தை காட்டினீர்கள்?” என்று கேட்டார்.
இதனைத்தொடர்ந்து பவானி சிங் மவுனம் சாதித்த நிலையில், “ பையனூர் பங்களா மதிப்பு ரூ. 5 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது எப்படி மதிப்பீடு செய்யப்பட்டது?” என்று நீதிபதி கேட்க, அதற்கும் மவுனம் சாதித்தார், பவானி சிங். இதனை தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சம்பந்தம்,” பையனூர் பங்களாவை 2 என்ஜினீயர்களை வைத்து மதிப்பீடு செய்தோம்”என்றார். “அப்படியென்றால், அந்த இரு என்ஜினீயர்களையும், வரும் 16–ம் தேதி இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று குமாரசாமி, உத்தரவு அளித்தார்.
இதனை தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணி சங்கர், “கொடைக்கானல், சிறுதாவூர், பையனூரிலுள்ள அசையா சொத்துக்கள் அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். உடனே, அந்த 3 பங்களா சொத்துக்களை மறுமதிப்பீடு செய்து, அதன் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று, அரசு வக்கீல் பவானி சிங்குக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் பின் பவானி சிங் வாதாடுகையில், ”ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ரூ. 66.65 கோடிக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி, சிறப்பு நீதிமன்றத்தில் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தோம்.,இதில் சில தவறுகளை தனி நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி, ரூ. 11 கோடியை தள்ளுபடி செய்து விட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தொகை ரூ. 55 கோடி என்று கணக்கிட்டு, தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பை, இந்த நீதிமன்றமும் உறுதிபடுத்த வேண்டும்” என்று கூறி, தனது வாதத்தை நிறைவு செய்தார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை, அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமி, தனது வாதத்தை 14 பக்கத்தில் எழுதி , நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது போல அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும், தனது தரப்பு நிறைவு வாதத்தையும், எழுத்து பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி குமாரசாமி இதுவரை 41 நாட்கள் இந்த விசாரணையை நடத்தியுள்ளார். இந்த நிலையில், மார்ச். 11–ம் தேதி , “ ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கின் விசாரணை முடிந்து விட்டது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்படுகிறது” என்று, நீதிபதி குமாரசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில் பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தாக்கலாகி இருந்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையை, நீதிபதிகள் மதன் லோகூர், ஆதர்ஸ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது. அப்போது அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அரிஜூனா வாதிடும் போது, “சிறப்பு நீதிமன்றத்தில் மட்டுமே வாதிட அனுமதி அளித்து கர்நாடக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பவானி சிங், தானாகவே, அப்பீல் வழக்கு விசாரணையிலும் ஆஜராகி வருகிறார்” என்றார். இதனையடுத்து, கர்நாடக அரசு, ஜெயலலிதா ,சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பினர் வரும் 18—ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை, அதிமுக-வினர் மட்டும் அன்றி, தமிழ்நாட்டிலுள்ள திமுக,. தேமுதிக., பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் உன்னிப்பாக எதிர்பார்க்கிறார்கள். இந்த அப்பீல் வழக்கின் விசாரணையை மார்ச் 18–ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தேதி வரம்பை அறிவித்து இருந்தது. அதற்கேற்ற படி, நீதிபதி குமாரசாமியும் தீவிரமாக பணியாற்றி , விசாரணையை முடித்து விட்டார். இந்த அப்பீல் வழக்கில், ஜெயலலிதா ஒரளவு நிம்மதி பெற்று விடுவார் என்றே, பெங்களூர், டெல்லி தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டால், 2016 சட்டமன்ற தேர்தலை விஸ்வரூபம் எடுத்து சந்திப்பார் என்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இந்த தீர்ப்பை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவின் சொத்து விவரத்தை தனியாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் விசாரணையை நடத்தி வரும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்துக்கணக்கை தனித்தனியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி தனித்தனியாக சொத்து பட்டியல் தாக்கல் செய்யப்பட்டால், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ரூ. 66 கோடிக்கு சொத்து சேர்த்தனர் என்ற அரசு தரப்பு வாதம் பொய்யாகி விடும் என்றும், இதனால் 4 பேருக்கும் தண்டனை குறைப்பு அளிக்க வாய்ப்புள்ளது என்றும் நீதித்துறை வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.
5 லாரி பட்டாசுகளுக்கு ஆர்டர்
ஜெயலலிதாவுக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் முழு நிவாரணம் கிடைத்து விடும் என்று அதிமுக-வினர் உறுதியாக நம்புகிறார்கள். இதனை தொடர்ந்து சிவகாசியில், 5 லாரி பட்டாசுகளுக்கு, சென்னை அதிமுக முக்கிய பிரமுகர்கள் ஆர்டர் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், கார்டனுக்கு முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தை அழைத்த ஜெயலலிதா, கடுமையாக கண்டித்து அனுப்பியதாக தெரிய வருகிறது. இது, ஓ.பி.எஸ். பதவிக்கே ஆபத்தாக முடியும் என்றும், அடுத்த முதல்வராக அமைச்சர் வைத்திலிங்கம் பதவி ஏற்கலாம் என்றும், சில பெயர் சொல்ல விரும்பாத அதிமுக-வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக