திங்கள், 8 டிசம்பர், 2014

முதலமைச்சர் காமராஜரின் மகத்தான சாதனைகள்

கர்ம வீரர் காமராஜரின் சாதனை

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் 
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் 
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் 
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் 
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக 
ஆட்சியில் அமர்வது. 
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் 
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் 
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் 
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் 
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் 
மாணவர்கள் பட்டினியாக இருக்கக் 
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் 
தீட்டி நிறைவேற்றினார்! 
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க 
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் 
பிச்சைக் கார மாநிலமாக 
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் 
அதே பிச்சைக்காரத் 
தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் 
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் 
கொண்டுவந்து நிறுத்தினார்! 
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம் 
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் 
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை 
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை 
6.கல்பாக்கம் அணுமின் நிலையம் 
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை 
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை 
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை 
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை 
11.துப்பாக்கித் தொழிற்சாலை 
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 
13.சேலம் இரும்பு உருக்காலை 
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை 
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம் 
17.சென்னை அனல்மின் நிலையம் 
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை 
இவை மட்டுமா? 
மணிமுத்தாறு 
ஆரணியாறு 
சாத்தனூர் 
அமராவதி 
கிருஷ்ணகிரி 
வீடூர் 
வைகை 
காவிரி டெல்டா 
நெய்யாறு 
மேட்டூர் 
பரம்பிக்குளம் 
புள்ளம்பாடி 
கீழ்பவானி 
என்று இன்றைக்கும் விவசாயிகள் 
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் 
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை! 
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் 
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். 
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 
இன்னும் சொல்லவா? 
159 நூல் நூற்பு ஆலைகள் 
4 சைக்கிள் தொழிற்சாலைகள் 
6 உரத் தொழிற்சாலைகள் 
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள் 
ரப்பர் தொழிற்சாலை 
காகிதத் தொழிற்சாலை 
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை 
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று. 
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் 
உருவாக்கினார். 
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் 
பாருங்கள் தோழர்களே...! 
காமராஜ் ஆட்சி புரிந்தது 9 
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில 
விடுபட்டுள்ளன) 
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த 
இந்தச் சாதனைகளில்... 
இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் 
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் 
செய்தது சாதனையா..? 
இல்லை 
"இலவச"த்தின் பேரில் நம்மைப் 
பிச்சைக்காரர்களாக 
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் 
செய்கை சாதனையா..?

புதன், 5 நவம்பர், 2014

மீண்டும் சைக்கிள் ராஜா - ஜி.கே.வாசன்

''பருவமழை சீஸனும் பொலிடிக்கல் சீஸனும் களைகட்டத் தொடங்கிவிட்டது. அடாது மழை பொழிய, அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறார் ஜி.கே.வாசன்''- என்று சிறகுகளைச் சிலிர்த்துக்கொண்டு நம் முன் வந்து அமர்ந்தார் கழுகார். துவட்டிக்கொள்ள டர்க்கி டவலும், சூடாக இஞ்சி டீயும் கொடுத்தோம். டீயை உறிஞ்சியபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார் கழுகார்.


''இனியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்க முடியாது என்று ஜி.கே.வாசன் முடிவெடுத்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சோனியாவும் ராகுலும் அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. பொதுவாக மாநிலங்களில் செல்வாக்கு உள்ள தலைவர்களை டெல்லி எப்போதும் மதிப்பதே இல்லை. முந்தைய உதாரணம், ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி. இப்போது ஜி.கே.வாசன். வருத்தத்தில் இருந்தார் அவர். இன்னொரு பக்கம் ஈழப் பிரச்னையும் மீனவர் விவகாரமும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தது. தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சோனியாவும் ராகுலும் இந்த விஷயத்தில் முடிவுகள் எடுத்தார்கள் என்பது இன்னொரு வருத்தம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சோனியா, ராகுலைப் பார்த்து ஈழப் பிரச்னை பற்றி ஜி.கே.வாசன் பேசினார். அதன் பிறகு பிரதமர் மன்மோகனை சந்தித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் பார்த்தார். அப்போதும் ஈழப் பிரச்னை பற்றியே பேசினார். இது எதையும் ராகுல் விரும்பவில்லை. அன்றே ஜி.கே.வாசனை கழற்றிவிட ராகுல் தயாராகிவிட்டார். இதுபற்றி அப்போதே சொல்லி இருந்தேன்.''
''ஆமாம்!''
''இப்படியே போனால் காங்கிரஸ் தமிழகத்தில் அதலபாதாளத்தில் போய்விடும் என்று ஜி.கே.வாசன் நினைத்தார்.  தனிக் கட்சி முடிவுக்கு வந்தார். ஆனால், நாடு முழுவதும் பி.ஜே.பி அலை வீசிவரும் நிலையில், தனிக் கட்சி தொடங்கினால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. 'அ.தி.மு.க தனித்துப் போட்டி என்று முடிவெடுத்துவிட்டது. தி.மு.க-வுடன் கூட்டுச் சேர முடியாது. இவர்கள் இருவரையும் விட்டால் பி.ஜே.பி கூட்டணிதான் இருக்கிறது. காங்கிரஸை உடைத்து பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேருவதை பி.ஜே.பி தொண்டர்களே விரும்பமாட்டார்கள். 1999-ம் ஆண்டு தி.மு.க-வுடன் இணைந்திருந்த மூப்பனார், அந்தக் கட்சி பி.ஜே.பி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் அதிலிருந்து விலகினார். எனவே, மதச்சார்பற்ற தன்மையை விட்டுவிடக் கூடாது. அதற்காகத் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையும் இல்லை’ என்று யோசித்த ஜி.கே.வாசன் தனிக் கட்சி முடிவை அப்போது ஒத்தி வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதைக் கையில் எடுக்க நினைத்தார். ஆனால், முன்கூட்டியே நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.''
''நெருக்கடியைச் சொல்லும்!''
''கடந்த இதழிலேயே லேசாகக் கோடிட்டுக் காட்டி இருந்தேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் புது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக இது நடக்கிறது. இந்த உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் படங்கள் பெரிதாக உள்ளன. ஸ்டாம்ப் சைஸில் காமராஜர், மூப்பனார், ராஜீவ், இந்திரா ஆகிய நால்வர் படங்களும் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சென்னைக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சின்னா ரெட்டி, 'இந்த உறுப்பினர் அட்டையில் உள்ள காமராஜர், மூப்பனார் படங்களை எடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். புதுச்சேரிக்கு வந்த தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் ஞானதேசிகனைச் சந்தித்து இதனைச் சொன்னார். 'தமிழகத் தலைவர்கள் படங்கள் இல்லாமல் இங்கு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது’ என்று ஞானதேசிகன் அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வந்ததால் அதனை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. கடந்த மாதத்தில் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ராகுல், முகுல் வாஸ்னிக், திரிவேதி போன்றவர்கள் இருந்துள்ளனர். ஞானதேசிகனிடம்  காமராஜர், மூப்பனார் படத்தை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்கள். ஆத்திரம் அடைந்த ஞானதேசிகன், 10 லட்சம் கார்டுகள் அடித்து 6 லட்சம் கார்டுகள் கொடுத்தாகிவிட்டது. அதனை மாற்ற முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ''6 லட்சம் கார்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிடுங்கள்’ என்று முகுல் வாஸ்னிக் சொல்லியிருக்கிறார். முடியாது என்று ராகுல் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டு வந்துவிட்டார் ஞானதேசிகன். சென்னைக்குத் திரும்பும்போதே ராஜினாமா முடிவுக்கு வந்துவிட்டார் ஞானதேசிகன். இவர் சென்னை திரும்பிய அன்று ஜி.கே.வாசன் வெளியூரில் இருந்தார். ராஜினாமா செய்யப் போவதாக ஞானதேசிகன் சொல்ல... 'உங்கள் உணர்வை வெளிப்படுத்த இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று ஜி.கே.வாசனும் தூண்டிவிட்டார். அதனால்தான் ஞானதேசிகன் துணிந்து ராஜினாமா செய்தார். அவரது முடிவை ஜி.கே.வாசனும் வெளிப்படையாக ஆதரித்தார்.''
''டெல்லியில் இருந்து சமாதானப் படலம் நடந்ததா?''
''முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்து ஜி.கே.வாசனைப் பார்த்தார். சமாதானம் சொன்னாராம் நாராயணசாமி. 'என்ன பிரச்னை இருந்தாலும் கட்சியை உடைக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம் அவர். கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார் ஜி.கே.வாசன். 'தமிழ்நாட்டுக்கு முகுல் வாஸ்னிக்கை பொறுப்பாளராகப் போட்டார்கள். அவர் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கே வரவில்லை. யாரோடும் கூட்டணிப் பற்றிய பேச்சுவார்த்தையை டெல்லி தலைமை நடத்தவே இல்லை. 40 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்றும் அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை டெல்லியில் நான்கைந்து பேர் முடிவெடுத்து அறிவித்தார்கள். வேட்பாளர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்று ஏ, பி, சி, டி என்று பட்டியல் போட்டு கொடுத்தது, யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கே தெரியாது. ஆந்திராவைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணமூர்த்தி மூலமாக இந்தப் பணத்தை சப்ளை செய்துள்ளார்கள். ஓரளவுக்கு செல்வாக்கான ஒருவருக்கு ரூ.2 கோடி கொடுத்திருந்தால் டெபாசிட் வாங்கும் அளவுக்காவது ஓட்டு வாங்கியிருக்க முடியும். அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அதிக பணம் கொடுத்துள்ளனர். பணமே இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சமும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.2 கோடியும் கொடுத்துள்ளனர். எங்கேயோ யாரோ உட்கார்ந்துகொண்டு இதை எல்லாம் முடிவு செய்தால் தமிழ்நாட்டில் தலைவர் எதற்கு? நாங்கள் எதற்கு? எங்களை மதிக்காதவர் இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று ஜி.கே.வாசன் கேட்டுள்ளார்.''
''நியாயம்தான்?''
''தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி டெல்லி தலைமைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதுதான் ஜி.கே.வாசனின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கான காரணங்களை ஆராய முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜரான ஜி.கே.வாசன், அப்போதே தனது விரக்தியை வெளிப்படுத்திவிட்டார். எனவே, வாசன் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை எதிர்பார்த்தே டெல்லியும் இருந்துள்ளது. இந்த நிலையில் உறுப்பினர் அட்டை விவகாரம் வெடித்து தனிக் கட்சியை உருவாக்கிவிட்டது. திங்கட்கிழமை அன்று மதியம் 12.20 மணிக்குப் புதிய பாதையில், தன் பயணம் இருக்கப் போகிறது என்பதை வாசன் அறிவித்தார். கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாகச் சொன்னார். அநேகமாக நவம்பர் 16-ம் தேதிக்குள் நடக்கலாம். சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால், மாநிலத்தின் மையப் பகுதியாக இருந்தால் நல்லது என்று திருச்சியைத் தேர்வு செய்தார்கள். மேலும், மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அதனைக் கவனித்துக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாராம் வாசன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சீரான பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, நேர்மையான அரசு நிர்வாகம் ஆகியவைதான் தனது கொள்கை என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வாசனின் இந்த திடீர் குஷியை அனைத்துக் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.''
''அதைச் சொல்லும்!''
''காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கில் 65 சதவிகிதத்துக்கு மேல் ஜி.கே.வாசன் பக்கமாகத்தான் இருக்கிறது என்பதை அனைத்துத் தலைவர்களும் உணர்ந்துள்ளார்கள். மேலும், அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர் வாசன். அதனால்தான் அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். விஜயகாந்த், வைகோ ஆகிய தலைவர்களும் வாசனுக்கு போன் போட்டு வாழ்த்துச் சொல்லியதாகச் சொல்கிறார்கள். 'வாசன் நம் பக்கமாக வந்தால் நம்முடைய கூட்டணி பலப்படும். அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தருவோம்’ என்று கருணாநிதி தூது அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டாலினும் வாசனும் அடிக்கடி பேசிக் கொள்ளக்கூடியவர்கள்தான் என்பதால், இந்த உறவு பலப்பட வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் தரப்பு செய்திகளை தனக்கு உடனுக்குடன் சொல்லச் சொல்லி கருணாநிதியும் உத்தரவு போட்டுள்ளார்.
இதே நேரத்தில் ஜெயலலிதாவும் ஜி.கே.வாசனின் திடீர் கட்சியைக் கவனித்து வருகிறார். அது சம்பந்தமான ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வாசன் பிரிந்து வந்தால் அவருக்கு மூன்று தொகுதிகள் தரவேண்டும் என்று சிலர் பேசியபோது, 'வாசனை கூட்டணியில் சேர்ப்பது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தத் தேர்தலில் நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனை வாசனிடம் சொல்லிவிடுங்கள்’ என்று ஜெயலலிதா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். மீனவர்களைக் காப்பாற்ற கடலோரப் பாதுகாப்புப் படை ரோந்து கப்பல்கள் விடப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறையவில்லை. இந்த நிலையில் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஓர் அறிக்கையை வெளியிட்டார். அப்போது தயாரான அறிக்கையில், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் திருத்தம் செய்த ஜெயலலிதா, ஜி.கே.வாசன் பெயரை நீக்கிவிட்டு,  மத்திய அரசு மீது மட்டும் புகார் சொல்லி அறிக்கையை வெளியிட்டார்.''
''ஓஹோ!''
''இப்போது நடந்ததைச் சொல்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சத்தியமூர்த்தி பவன், ஜி.கே.வாசனின் வீடு இருக்கும் ஆழ்வார் பேட்டை பகுதிகளில் போலீஸார் அதிகப்படியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அறிவிப்பு வெளியிடப்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை ஹோட்டல் வரை வழிநெடுகிலும் வாசன் கட் அவுட்கள் வைக்கப்பட்டன. அதனை போலீஸார் தடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இவை அனைத்துமே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்க வேண்டும். ஆனால், அந்த அனுமதி இல்லாமல் இந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை எல்லாம் பார்க்கும்போது, வாசனின் புதுக் கட்சிக்கு ஜெயலலிதா வலை வீசுவதற்கான முஸ்தீபுகள் என்றே சொல்கிறார்கள்.''
''இதில் சிக்கிக்கொண்டவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தானா?''
''கடந்த சில ஆண்டுகளாகவே வாசனும் இளங்கோவனும் அதீத அன்புடன் நட்பு பாராட்டி வந்தார்கள். அதனால்தான், தனக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டதும் வாசனைத்தான் முதலில் போய் பார்த்து ஆசி வாங்கினார் இளங்கோவன். இதனை டெல்லி எதிர்பார்க்கவில்லை. அப்போதே தான் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக வாசன் சொல்லிவிட்டார். அறிவிப்பு செய்த அன்றும், இளங்கோவனுக்கு இவர் வாழ்த்து தெரிவித்தார். 'வாசன் தனிக் கட்சி தொடங்கக் கூடாது’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் இளங்கோவன்.''
''இளங்கோவன் பெயர் பட்டியலிலேயே இல்லையே, அவரை எப்படி அறிவித்தார்கள்?''
''டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் ஆகியோர் பெயர்கள்தான் பரிசீலனையில் இருந்தன. 'இளங்கோவனை நியமித்தால்தான் வாசன் தனிக் கட்சி தொடங்க மாட்டார்’ என்று டெல்லி நினைத்ததாம். ஆனால், அதனை மீறி வாசன் வெளியில் போனதை டெல்லி எதிர்பார்க்கவில்லை'' என்ற கழுகார், கடந்த இதழில் வந்த பா.ம.க செய்திகளுக்கு ஃபாலோ - அப் தர ஆரம்பித்தார். ''டாக்டர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்தில் ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் கூட்டு என்று செய்தி பரவியது. கூட்டணிக்குத் தயார் என்பதைப்போலவே கருணாநிதி, வைகோ, ஸ்டாலின் ஆகிய மூவரும் மாறி மாறி பேட்டிகள் கொடுத்தனர். இந்த நிலையில் திடீரென்று வைகோ, இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பற்றி காங்கேயம் திருமணத்தில் மனம் திறந்துள்ளார்.''
''அதைப் பற்றி வேறுவேறு செய்திகள் வருகின்றனவே?''
''கடந்த 2-ம் தேதி ஈரோடு ம.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான கணேசமூர்த்தியின் மகன் கபிலனது திருமணம், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள என்.எஸ்.என் மஹாலில் நடந்தது. திருமணத்தை நடத்திவைக்க வைகோ வந்திருந்தார். அங்கே பேசிய வைகோ, 'கடந்த மூன்று நாட்களாகப் பல்வேறு செய்திகள் பத்திரிகைகளிலே உலவிக்கொண்டிருக்கிற காரணத்தால் இது அரசியலிலே பரபரப்பான நேரம், மூன்று நாட்களாக ஒரு பெரிய கேள்வி எழுந்திருக்கிறது அதைப் பற்றிய வாழ்த்துகள்... விமர்சனங்கள்... இணையத்தில் பரவுகிற மின்னல்வேக செய்திகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நான் ஒன்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இத்தனை நாட்களாக இல்லாமல் இனிமேலா நான் ஒரு பெரிய பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று  ஆசைப்படப் போகிறேன்? நாடாளுமன்றத் தேர்தலிலே பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க ஆகியவற்றோடு தோழமைகொண்டு போட்டியிட்டோம். எனது சகோதரர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பினேன். வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா எம்.பி-யாகும் வாய்ப்பு வைகோவுக்கு இருக்கிறது, நரேந்திர மோடியின் நேசத்துக்குரியவர், பி.ஜே.பி-யின் வடகுலத்து தலைவர்கள் எல்லாம் அவர் மீது அளவற்ற அன்புகொண்டிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பதவியேற்பு விழாவுக்கு வந்த ராஜபக்ஷேவை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டி கைதாகி இருந்தேன். எனக்கா சுயநலம்? நானா பதவி பவுசுகளை எதிர்பார்ப்பவன்? ராஜ்யசபா எம்.பி கொடுப்பார்களோ, நம்மை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற எண்ணம் வரவில்லையே... எப்படி வரும் எனக்கு? என்னிடம் பிழைகள் இருக்கலாம். என்னிடம் குறைகள் இருக்கலாம். நான் மாமனிதனல்ல. நான் ஒரு சாதாரண மனிதன். முழுமனிதனாக இருப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவன். எனக்கா பதவி ஆசை?’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டே போனார் வைகோ.''
''கூட்டணி பற்றி என்ன சொன்னார்?''
''ராமதாஸ் இல்லத் திருமணத்துக்குச் சென்றதைப் பற்றி சொன்ன வைகோ, 'அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்ப்பது நலம் விசாரிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது. அதற்கு அடையாளம்தான் சகோதரர் ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு என்று நான் சொன்னேன். கண், காது, மூக்கு வைத்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியைப்பற்றி எல்லாம் நான் இப்போது சிந்திக்கவே இல்லை. எனக்கு என்னைவிட கட்சியும் கொள்கைகளுமே பெரியது’ என்று முடித்தார் வைகோ. இதேபோல் ராமதாஸும் 'தி.மு.க., அ.தி.மு.க இல்லாத கூட்டணி’ என்று கிளம்பியிருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதனைச் சொல்ல வேண்டியது இல்லை என்று இந்த தலைவர்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்'' என்று சொல்லியபடி எழுந்த  கழுகார்,
''வைகோ - ஸ்டாலின் சந்தித்த போட்டோ, சம்பவம் நடந்த மறுநாள் முரசொலியில் வெளியிடப்படவில்லை என்று சொல்லியிருந்தேன். அதற்கு அடுத்த நாள் முரசொலியில் வெளியாகி உள்ளது. முக்கியத்துவம் கிடைத்துவிடாமல் 7-ம் பக்கத்தில், அடியில் அந்த போட்டோ வெளியிடப்பட்டு உள்ளது. 'வைகோவை சந்தித்தார் என்பதற்காகத்தான் அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதனால்தான் அடக்கி வாசித்தார் ஸ்டாலின்’ என்கிறார்கள் கட்சியில்'' என்றபடி பறந்தார்.

SOURCE:JUNOIR VIKATAN

செவ்வாய், 4 நவம்பர், 2014

நடிகர்களின் அரசியல்-உலகின் முதல் முன்னோடி!

''தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டை போட்டிருந்த காலத்திலேயே என் விரலைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார் என்ற பெருமையும் என் தம்பிக்குத்தான்!'’ -இப்படி பேரறிஞர் அண்ணாவால் பாசத்துடன் குறிப்பிடப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
சிவாஜி கணேசனுடன் 'பராசக்தி’ படத்திலேயே இணைந்து தோன்றியவர்; திரையுலகில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் பாணியை கைக்கொண்டவர்; பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா... என தமிழக அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர்; திராவிடக் கட்சிகளுடன் கொண்ட நெருக்கம் காரணமாக பக்தி படங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருந்ததால் 'லட்சிய நடிகர்’ எனக் குறிப்பிடப்பட்டவர்; சினிமா பிரபல்யம் தேர்தலில் வாக்குகளை ஈர்க்கும் என்பதை அண்ணா உணர, முதல் உதாரணமாக இருந்தவர்; அ.தி.மு.க-வுக்கு எதிராகவே 'எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர் கழகம்’ தொடங்கி, பின்னர் எம்.ஜி.ஆரின் தலையீட்டால் சமரசம் ஆனவர்; 1980-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (எம்.ஜி.ஆரின் வெற்றி வித்தியாசத்தைவிடவும்) ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றவர்; இறுதிக் காலம் வரை எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்புகொண்டிருந்தவர்; அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றவர்... என சினிமாவிலும் அரசியலிலும் எஸ்.எஸ்.ஆரின் பயணம்... பல அடுக்கு அனுபவங்களைக் கொண்டது. அந்தப் பயணி கடந்த வாரம் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.  86-வது வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக இயற்கை எய்திவிட்டார் எஸ்.எஸ்.ஆர்.  
மறைவுக்கு ஒரு மாதம் முன்பாக அகநி பதிப்பகம் வெளியிட்ட 'நான் வந்த பாதை' நூலில் தன் சுயசரிதையை சிறுசிறு அனுபவங்களாகத் தொகுத்திருக்கிறார்  எஸ்.எஸ்.ஆர். அதில் இருந்து சில பகுதிகள் இங்கே...
'ரொம்ப சின்ன வயசுலயே அஞ்சாம் கிளாஸ் முடிச்சிட்டேன். அதுக்கு மேல படிக்க நகரப் பள்ளிக்குப் போகணும். போனாலும் வயசைக் காரணம¢ காட்டி அஞ்சாவதில்தான் சேர்ப்பாங்க. அதனால் ஒரு வருஷம் கழிச்சே சேர்க்கலாம்னு வீட்ல முடிவு பண்ணிட்டாங்க. அப்பதான் அப்பாவோட நண்பர் நாடகக் குழு ஓனர் சுப்பு ரெட்டியார் என்னை நாடகத்தில் நடிக்க அழைச்சிட்டுப் போனார்.'
அதுவே பிறகு டி.கே.எஸ். நாடகக் குழுவில் எஸ்.எஸ்.ஆரைச் சேர்த்து சினிமாவுக்குள்ளும் பிரவேசிக்க வைத்தது. மதுரைக்கு ஒருமுறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்தபோது, நாடகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு அந்தக் கூட்டத்துக்குச்  சென்றிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். மேடையில் நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பேசியதைக் கேட்டவருக்கு, அரசியல் ஆர்வம் உள்ளுக்குள் துளிர்த்தது.
சினிமாவில் எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர் சிவாஜி கணேசன். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் அடர்த்தியான நட்பு பூத்தது. அந்த முதல் சந்திப்பை எஸ்.எஸ்.ஆர் இப்படி விவரிக்கிறார்...
'டி.பி.பொன்னுச்சாமி பிள்ளை நாடகக் குழுவில் இருந்து பெண்ணைப்போல நீளமான தலைமுடி, நீண்ட மூக்கு, பளிச் கண்களுடன் கவர்ச்சியான தோற்றத்தில் ஒரு பையன் வந்திருந்தார். 'இந்தப் பையன் கணேசன். இன்று இரவு இங்கு தங்கட்டும்'னு சொல்லிட்டுப் போனார் பொன்னுச்சாமி ப¤ள்ளை. அடுத்த நாள் அவர் திரும்புவதற்குள் நீண்ட நாள் பழகிய நண்பர்களைப்போல நாங்கள் மாறியிருந்தோம்.'  
'பராசக்தி’ படத்தில் சிவாஜியின் சகோதரராக நடித்த பிறகு சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்த எஸ்.எஸ்.ஆர்., தனது கணீர் வசன உச்சரிப்பால் ரசிகர்களை பெரும் அளவு ஈர்த்தார். அந்த ஈர்ப்பே அவருக்கு 'சினிமா ஹீரோ’ அந்தஸ்தையும் வழங்கியது.
பெரியார் மீது கொண்ட பற்றினால் அடிக்கடி அவரைச் சந்திப்பார் எஸ்.எஸ்.ஆர். அப்போது பெரியாருடன் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றிய சந்தேகங்கள்... உரையாடலாக, வாக்குவாதமாக வடிவம் எடுக்கும். 'சிறுவன்தானே’ என எண்ணாமல் பெரியாரும் எஸ்.எஸ்.ஆருக்குப் புரியும்விதமாகப் பேசுவார். அப்படி ஒருமுறை விவாதத்தின்போது, 'பகுத்தறிவுக் கொள்கை எல்லாம் கத்துக்கிடுறது இருக்கட்டும். முதலில் நீங்க சிக்கனக் கொள்கையைக் கத்துக்கங்க. நீங்க வர்றப்பலாம் நானும் பார்க்கிறேன்... முழுக்கை சட்டைதான் போட்டுட்டு வர்றீங்க. அதை அரைக்கை சட்டையா போட்டுக்கிட்டா, மிச்சத் துணியில் ரெண்டு கைக்குட்டை செஞ்சுக்கலாம்ல!’ என்று கேட்டிருக்கிறார் பெரியார். அந்த அளவுக்கு எஸ்.எஸ்.ஆர் மீது உரிமையும் பிரியமுமாக இருப்பார் பெரியார்.  
அண்ணா மீது எஸ்.எஸ்.ஆருக்கு அளப்பரிய அன்பு. அவருடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு, நாடகத்துக்கு விடுப்பு கிடைக்கும்போது எல்லாம் காஞ்சிபுரம் சென்று அண்ணாவை அருகில் இருந்து ஒரு ரசிகனாக ரசிப்பார். ஒருமுறை அண்ணா வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. அப்போது எஸ்.எஸ்.ஆரை அழைத்த அண்ணா, 'நீ சினிமாவில் நடித்தபோது அணிந்த கோட் சூட்களைக் கொடு. அதை எனக்கு தகுந்த மாதிரி ஆல்டர் செய்துகொள்கிறேன்’ என்று கேட்டிருக்கிறார். 'புதிதாகவே தைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என எஸ்.எஸ்.ஆர் சொன்னபோதும் 'எதுக்கு வீண் செலவு?’ என மறுத்து பழைய கோட் களையே கொண்டுவரச் சொல்லியிருக்கிறார் அண்ணா. 'சரி... சரி...’ என்றபடி அண்ணாவுக்கே தெரியாமல் புதிய ஆடைகளைத் தைத்துக் கொடுத்து அண்ணாவை வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். சுற்றுப்பயணம் முடித்து திரும்பிவந்த அண்ணா, போப் தனக்குப் பரிசு அளித்த பேனாவை எஸ்.எஸ்.ஆருக்குக் கொடுத்தார். இப்படி இருவருக்கும் இடையில் தந்தை-மகன் பாசப் பிணைப்பு இருந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கல்லூரித் தோழன்போல நட்பு பாராட்டியிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். நாடகங்களில் தன்னுடன் ஹீரோயினாக நடித்து வந்த பங்கஜத்தைக் காதலித்தார்         எஸ்.எஸ்.ஆர். பங்கஜத்தின் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்குச் சென்று பெண் கேட்ட சம்பவத்தை காதல் நினைவுகளாகப் பகிர்ந்திருக்கிறார்.
1958-ம் ஆண்டு ஜனவரியில், பெரியார் மற்றும் தமிழகத் தலைவர்களை விமர்சித்து அப்போதைய பிரதமர் நேரு பேசியதைக் கண்டித்து, 'நேரு சென்னை வரும்போது கறுப்புக்கொடி காட்ட வேண்டும்’ என அண்ணா சொல்லியிருக்கிறார். அப்போது கழகத்தில் தீவிரமாக இருந்த எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எஸ்.எஸ்.ஆரைக் கைதுசெய்து மதுரை சிறையில் வைத்தபோது அதே அறையில்தான் எம்.ஜி.ஆரும் இருந்திருக்கிறார்.
'பெயர்தான் முதல் வகுப்பு அறை. ஆனால், அது மிகவும் சின்னது. படுக்க திண்ணை மாதிரி ஒரு மேடை. அதில் அழுக்காக மூட்டைப்பூச்சிகள் நெளியும் ஒரு மெத்தை. அதைத் தூக்கிப்போட்டுவிட்டு நானும் எம்.ஜி.ஆரும் தரையிலேயே படுத்தோம். அடுத்த நாள் அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சாதம் கொடுத்தார்கள். எந்தச் சலனமும் இல்லாமல் எம்.ஜி.ஆர் அதைச் சாப்பிட்டார். 'இந்த மாதிரி சாப்பாட்டை சின்ன வயசிலேயே சாப்பிட்டுப் பழகியிருக்கேன். அதனால் இது எனக்குப் புதுசு கிடையாது'னு சொன்னார்' என்று அந்த நாட்களை நினைவுகூர்கிறார் எஸ்.எஸ்.ஆர்.
அண்ணா மறைந்த பிறகு அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த எஸ்.எஸ்.ஆர் அதிக அளவு மது அருந்தத் தொடங்கியிருக்கிறார். இரவில் அண்ணா சமாதிக்குச் சென்று அங்கேயே தூங்கிவிடுவாராம். இது தினசரி சம்பவமாகி இருக்கிறது. பிறகு உடல்நலம் பாதித்து மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகே தேறி வந்திருக்கிறார்.  
சப்பைக்கட்டு காரணம் சொல்லி தி.மு.க-வில் இருந்து எஸ்.எஸ்.ஆர் விலக்கப்பட்டபோது, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். அங்கும் சில விரும்பத்தகாத சூழ்நிலை காரணமாக மனம் ஒடிந்து, 'எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ஆர் கழகம்’ தொடங்கி  சேடப்பட்டி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், எம்.ஜி.ஆர் தரப்பில் இருந்து வந்த சமாதானம் காரணமாக அந்த முடிவைக் கைவிட்டார். பிறகு எம்.ஜி.ஆரைச் சந்தித்து நடந்த விவரங்களைச் சொல்ல, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். பிறகு ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர். இருவருமே அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் அளவுக்கு இருவரிடையே நட்பு இறுக்கம் ஆனது. பிறகு மதுரை மேற்கில் எம்.ஜி.ஆரும், ஆண்டிப்பட்டியில் எஸ்.எஸ்.ஆரும் போட்டியிட, மற்ற மனுக்களை இருவரும் வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். அந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.எஸ்.ஆர் ஜெயிக்க, 'மந்திரி சபையில் உனக்கும் இடம் உண்டு. எந்த அமைச்சர் பதவியை வேண்டுமானாலும் கேள்’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, 'அமைச்சர் பதவி எனக்கு வேண்டாம். நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதால் கேட்கிறேன்... முதலமைச்சர் பதவி கொடுப்பீர்களா?’ எனச் சிரித்துக்கொண்டே கேட்டிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அதைவிட ஆரவாரமாகச் சிரித்துவிட்டு சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்.
1989-ல் அ.தி.மு.க உடைந்து ஜெயலலிதா தலைமையிலான அணிக்காக சேவல் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார் எஸ்.எஸ்.ஆர். அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அது முதல் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியே இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.
உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் மன்றத்துக்குள் நுழைந்த முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர்-தான். அந்த விதத்தில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கே முன்னோடி எஸ்.எஸ்.ஆர்!  

திங்கள், 20 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம்

சிறையில் இருந்து ஜாமீனில் விடு தலையான ஜெயலலிதாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘ஜெயலலிதா ஜி, நீங்கள் மீண்டும் போயஸ் தோட்டத் துக்கு திரும்பியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு இனிதான எதிர்காலம் அமைய பிரார்த் தனை செய்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடன், அமைதியுடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
tamilnaduarasiyalkalam.blogspot.com/

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எனது ஆதரவு, அன்பு, கருணை எப்போதும் உங்களுக்கு உண்டு. வாழ்வில் பல்வேறு கடினமான நிகழ்வுகளை சந்தித்துள்ளீர்கள். அவற்றை மிகவும் தைரியத்துடன், கட்டுப்பாட்டுடன் நீங்கள் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் விரைவிலேயே நிர்வாக பொறுப்புக்கு திரும்புவீர்கள் என்று உறுதியாக தெரிவிக்கிறேன். உங்கள் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று ஏராளமான ஆதரவாளர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

இருவரின் வாழ்த்துச் செய்திகளை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

வியாழன், 9 அக்டோபர், 2014

சிறையில் ஜெயலலிதா... என்ன நினைக்கிறார்கள் மக்கள் ?

சிறையில் ஜெயலலிதா... என்ன நினைக்கிறார்கள் மக்கள் ?.இந்து நாளிதளில் வெளியான தகவல்கள் வாசகர் வசதிக்காக புகைபடமாக







ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழக ழுதல்வர் ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு : 'திக்... திக்...'

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அடுத்த மாதம், 20ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரும், 'திக்... திக்...' மனதுடன், தீர்ப்பு நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, 1991ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக, அடுத்து ஆட்சிக்கு வந்த, தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல்வேறு இழுபறியால், 18 ஆண்டுகளுக்கு பின், ஒருவழியாக, வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம், 20ம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்துள்ளார்.தீர்ப்பு, முதல்வருக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்ற விவாதம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இத்தீர்ப்பை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2001ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்தபோது. 2001 செப்டம்பர் மாதம், 21ம் தேதியில் இருந்து, 2002 மார்ச் 1ம் தேதி வரை, தற்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வராக இருந்தார்.அதன்பின், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அதே போல், சொத்து குவிப்பு மீதான வழக்கின் தீர்ப்பும், செப்டம்பர் மாதம் வருகிறது. தீர்ப்பை வைத்து, அரசியல் செய்யலாம் என, எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.முதல்வர் மீதான வழக்கின் தீர்ப்பு, அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, அனைத்து தரப்பினரும், தீர்ப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லோக்சபா தேர்தலில், அசைக்க முடியாத வெற்றியை பெற்றவர், அடுத்த சட்டசபை தேர்தலையும், துணிச்சலுடன் எதிர் கொள்வார்.இது, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, முதல்வருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என, அவரது கட்சியினர் விரும்புகின்றனர். தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாததால், படபடப்புடன் நாட்கள் நகர்கின்றன

சனி, 30 ஆகஸ்ட், 2014

ரஜினி நிராகரித்த பா.ஜ.க அழைப்பு

தமிழக பா.ஜ.க ரஜினியை தன் வசம் இழுக்க முயற்சி நடந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்
விதமாக...
"அரசியலுக்கு வந்தால் தனி கட்சி தொடங்குவேன், நோ பா.ஜ.க"

ஞாயிறு, 20 ஜூலை, 2014

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் - ஜெயலலிதா

குடியரசுத் தலைவர் உரைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பினை அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு வரவேற்பு தெரிவித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆற்றிய விரிவான மற்றும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய உரையினை வரவேற்கிறேன். புதிய அரசின் கொள்கை ரீதியான முன்னுரிமைகளை, மிகவும் திறம்படவும், தெளிவாகவும் குடியரசுத் தலைவர் தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். விவாதமும், கருத்து வேறுபாடும் கொண்ட விவகாரங்களை குடியரசுத் தலைவர் உரை தெளிவுபடுத்தியிருக்கிறது. இது அடுத்துவரும் 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியதாகும்.
எதிர்பார்ப்புகளுக்கு அங்கீகாரம்: மத்திய அரசுக்கு வாக்களித்து உறுதியான தேர்தல் தீர்ப்பினை வழங்கிய வாக்காளர்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக அங்கீகரிப்பதாக குடியரசுத் தலைவரின் உரை அமைந்துள்ளது. அனைத்து முக்கியத் துறைகளையும், நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியப் பிரச்னைகளையும் குடியரசுத் தலைவரின் உரை உள்ளடக்கியுள்ளது. ஏழை மக்களுக்கு பெருமளவிலான முன்னேற்றங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
முறையான கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டினை அகற்றுதல் உள்ளிட்ட கல்வி தொடர்பான பல ஆக்கப்பூர்வமான யோசனைகள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த கல்வியில், விளையாட்டு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுத் திறன் அறியும் குழு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்ட புதிய சுகாதார கொள்கையினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டு தினமான 2019-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பிட வசதி அளிக்க வகை செய்யும் ஸ்வாச் (நஜ்ஹஸ்ரீட்ஸ்ரீட்) பாரத் மிஷன் மிகவும் உயர்வான திட்டம். தமிழகத்தினை 2015-ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்றதாக மாற்றுவதற்கு மிகுந்த ஆவலுடன் இலக்கினை நிர்ணயித்துள்ளோம். சவால் மிகுந்த இந்த இலக்கினை எட்டுவதற்கு எங்களது முயற்சி இருமடங்காக அதிகரிக்கப்படும். இதற்கு மத்திய அரசின் ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.
ஊரக கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பது மிகவும் பொருத்தமானது. ஊரக வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான நிதியினை சிறப்பான முறையில் பயன்படுத்துவதை இது உறுதிப்படுத்தும். விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு மற்றும் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்துவதற்கு சரியான நேரத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சரக்கு-சேவை வரிவிதிப்பு: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட சமுதாயத்தின் சாதகமற்ற பிரிவினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் உத்வேகம் குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என மீண்டும் உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, மத்திய-மாநில கூட்டமைப்புக்கான ஒத்துழைப்பில் உத்வேகம் கொண்டு வரப்படுவதற்கான அறிவிப்பு குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. கடந்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக நீர்த்துப் போகச் செய்த கூட்டமைப்புக்கான உத்வேகம், இதன் மூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு ஆதரவு கொடுப்பதை எதிர்க்கவில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி ஊக்கத் தொகை வழங்கும் பிரச்னையில், குறிப்பாக பகுதி வாரியாக வரிவிலக்கு அளிப்பதிலும், அண்டை மாநிலங்களுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், எச்சரிக்கையுடன் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின் செயல்படுத்தப்படும் என குடியரசுத் தலைவர் தனது உரையில் கோடிட்டுக் காட்டியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்தும், சேவை வரி விதிப்பை செயல்படுத்துவதற்கு முன் முழுமையாக கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளேன்.
புதிய நகரங்கள்-சுற்றுலா மையங்கள்:
உள்கட்டமைப்பு, தொழில் மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து சரியான பார்வை கொண்டுள்ளதும், இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு சந்தேகத்துக்கு இடமின்றி உதவும் வகையில் வழங்கப்பட்ட சாதகமான தகவலாகும். மேலும், 100 புதிய நகரங்களையும், 50 சுற்றுலா மையங்களையும் உருவாக்குவது தொடர்பான அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
மாநில காவல்துறையை நவீனப்படுத்துவற்கு மத்திய அரசு உதவும் என்ற அறிவிப்பும், அதன்படி தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய கடலோர எல்லைகளைப் பாதுகாக்க தேசிய கடலோர ஆணையம் உருவாக்கப்படும் என்று குடியரசு தலைவர் உரையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கக்கூடியது. இந்த நடவடிக்கையில் மாநில அரசு முழுமையாக பங்கேற்கும்.

வெள்ளி, 30 மே, 2014

அமைச்சர்களுக்கு மோடி-யின் ஆறு கட்டளைகள்

   அமைச்சர்களுக்கு மோடி ஆறு கட்டளை

1, எந்த ஒரு அமைச்சரும் தனது தனி செயலாளராக அல்லது உதவியாளராக தனது உறவினரை நியமிக்க கூடாது.

2, உறவினர்கள் யாருக்கும் எந்தவித சலுகையும் வழங்ககூடாது .

3,உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்க கூடாது.

4, அமைச்சர் பதவியில் நேரமையாக நடந்துகொள்ள வேண்டும்.

5, அமைச்சர்கள் யாரும் ஆடம்பரமாக அதிகமாக செலவு செய்ய கூடாது , அரசு செலவுகளை குறைக்க வேண்டும்.

6, அமைச்சரானதால் மக்களிடம் இடைவெளி ஏற்பட கூடாது. நேர்த்தி தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்


செவ்வாய், 27 மே, 2014

சார்க் நாட்டு தலைவர்களுடனான பிரதமர் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை

இலங்கை தமிழர்
நிலை குறித்து பிரதமர்
நரேந்திரமோடி இலங்கை அதிபர்
ராஜபக்சேவுடன்
விவாதித்தார் என்றும்,
தமிழர்கள்
நிலை குறித்து அக்கறை கொள்ள
பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும்
இலங்கை வர ராஜபக்சே விடுத்த
அழைப்பை மோடி ஏற்று கொண்டார்
என்றும் இந்திய
வெளியுறவு துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். சார்க்
நாட்டு தலைவர்களுடனான பிரதமர்
நரேந்திரமோடியின் இன்றைய
பேச்சு பயனுள்ளதாகவும், சார்க்
நாட்டு உறவுகள் வலுப்பெறும்
வகையிலும் இருந்தது என
வெளியுறவு துறை செயலர்
சுஜாதாசிங் கூறினார். பிரதமர்
நரேந்திரமோடி இன்று அண்டை நாடான
ஆப்கான், பாகிஸ்தான், இலங்கை,
நேபாளம், மொரீஷியஸ்,
மாலத்தீவு தலைவர்களுடன்
இன்று பேச்சு நடத்தினார். இதில் என்ன
விஷயங்கள்
குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க
கடமைப்பட்டுள்ளோம். இது குறித்து அவர் மேலும்
கூறுகையில், ஆப்கனில் பயங்கரவாதம்
ஒழிப்புக்கு இந்தியாவின்
ஒத்துழைப்பு குறித்து பிரதமர்
நரேந்திரமோடி அதிபர் கர்சாயுடன்
பேசினார். சமீபத்திய இந்திய தூதரகம்
மீது நடந்த தாக்குதல்
முறியடிப்புக்கு உதவிய கர்சாயிக்கு ,
பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மொரீஷியஸ் பிரதமர்
நவீன்சந்திர ராம் கூலமிடம் நடத்திய
பேச்சில் அமைதி, மற்றும் வளர்ச்சிப்பணிகள்
குறித்து விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகள் உறவு,
பொருளாதாரம்,
புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆகியன குறித்தும்,
இந்திய கடல் பகுதியில் இரு நாடுகள்
ஒத்துழைப்பு ஆகியன குறித்தும்
விவாதிக்கபட்டன.
பூட்டான் மன்னர் ஷெரீங்
டாப்கேவிடம் நடத்திய பேச்சில் ,
சிறப்பு சமூக சேவைக்கு உதவி, எனர்ஜி மற்றும்
சர்வதேச அரசியல் நிலவரம்
குறித்து விவாதிக்கப்பட்டது.
மாலத்தீவு அதிபர்
அப்துல்லா கயூமுடன் நடந்த பேச்சில்,
இரு நாடுகளும் தேசிய அளவிலான
பங்கீட்டில் ஒத்துழைப்பு. மற்றும்
பயங்கரவாத
ஒழிப்பு தொடர்பாக
ஒத்துழைப்பது,
போக்குவரத்து இணைப்பு ஆகியன,
பெட்ரோலியம், எண்ணெய்
துறையில் பங்கீடு, ஆகியன
விவாதிக்கப்பட்டன.
நேபாள பிரதமர்
கொய்ராலாவுடன் , நேபாள-
இந்தியா, நேபாள இருநாடுகளும்
பாரம்பரிய, கலாச்சார விஷயத்தில்
உடன்பாடுகள்,
பொருளாதார ரீதியிலான,
நடவடிக்கைகள், ஹைட்ரோ பவர், அமைப்பதில்
தேவையான உதவிகள் ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன்,
நடத்தப்பட்ட பேச்சில், இந்தியாவின்
உணர்வுப்பூர்வ விஷயங்கள், தமிழ்
மக்கள் வாழ்க்கைத்தரம், 13 வது சட்ட
திருத்தம் கொண்டு வருவது,
வர்த்தக ரீதியிலான உறவு,
போக்குவரத்து இணைப்பு, ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டன . மீனவர்கள்
பிரச்னை என்பது நீண்ட காலமாக
இருந்து வருகிறது இது குறித்து தீர்க்க
தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும்.
தமிழர் நிலையில் இந்தியாவின்
உணர்வை அந்நாடு மதிக்கும் என்ற
நம்பிக்கை இன்றைய பேச்சின் மூலம்
ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரீப்புடன் : பாகிஸ்தான்
நிச்சயம் இந்தியாவுக்கான
பயங்கரவாதத்தை ஒழிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்
நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான
எல்லை பயங்கரவாத செயல்கள்
நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இந்திய (மும்பை)
குண்டு வெடிப்பு தொடர்பான
வழக்கில், உடனடியாக
இயல்பு நிலைக்கு இரு நாடு பிரச்னைகளும்
வரவேண்டும், பொருளாதாரம்,
அரசியல், கலாச்சாரம்
ஆகியனவற்றில் முன்னேற்ற நடவடிக்கை வர
வேண்டும் என்பது குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின்
வாழ்த்துக்களை அந்நாட்டு சபாநாயகர்,
பிரதமர் மோடிக்கு தெரிவித்தார். நீண்ட
கால உறவு நண்பராக இருந்து,
ஒன்றிணைந்து, ரயில்,
சாலை போக்குவரத்து ஆகியவற்றில்
தேவையான உடன்பாடுகள் ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு வெளியுறவு செயலர்
சுஜாதாசிங் கூறினார